ரோகித் இல்லை... குஜராத்துக்கு எதிரான வெற்றிக்கு காரணம் அவர்தான் - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா

1 day ago 3

முல்லான்பூர்,

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்த தோல்வியின் மூலம் குஜராத் அணி வெளியேறியது. மும்பை அணி அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆமதாபாத்தில் நாளை சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டை கைப்பற்றி சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ராதான் வெற்றிக்கு காரணம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் சமநிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் அணிக்காக அறிமுகமான ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி போட்டியைத் தொடங்கினார். ரோகித் சர்மா நேரத்தை எடுத்துக் கொண்டாலும் சிறப்பாக செயல்பட்டார். இது போன்ற முக்கியமான போட்டிகளில் அது போன்ற விளிம்புகள் வெற்றிக்கு உதவும். எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக பந்துவீசினர்.

குறிப்பாக பும்ரா. அவர்தான் வெற்றிக்கு காரணம். மும்பையில் விற்கும் வீட்டுமனை போன்று பும்ரா விலைமிக்கவர். அவரிடம் பந்தை கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலையாக இருந்தது. அதே சமயம் கடைசி நேரத்தில் அவர் வந்து பவுலிங் செய்வதற்கு நாங்கள் பேட்டிங்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரன்களை எடுப்பது முக்கியம். கடைசியில் பும்ரா அந்த முக்கியமான ஓவரை வீசினால் வெற்றிக்கான விளிம்பு அதிகரிக்கும். தோல்வியிலிருந்து மீண்டு வருவது மிகவும் முக்கியம். தற்போது நாங்கள் அடுத்த ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளோம்" என்று கூறினார்.

Read Entire Article