ஸ்ரேயாஸ் அதிரடி... மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்

1 day ago 5

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கிடையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

இதையடுத்து மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 8 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த திலக் வர்மாவுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.

இதில் பேர்ஸ்டோ 38 ரன்களில் ஜோஸ் இங்கிலிஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில், கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதிரடியாக விளையாடி அரைசதம் நோக்கி முன்னேறிய சூர்யகுமார் யாதவ், 44 ரன்கள் எடுத்த நிலையில் நேஹல் வதேரா பந்துவிச்சில் விக்கெட்டை இழந்தார். 7 பவுண்டரிகளை விளாசிய நமன் திர், 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்த விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 20 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்தார்.

5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து நேஹல் வதேரா-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஒன்று சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

அரைசதம் நோக்கி முன்னேறிய நேஹல் வதேரா(4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 48 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஷாங்க் சிங், 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதிவரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் (5 பவுண்டரி, 8 சிக்ஸர்) 87 ரன்கள் விளாசினார்.

இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அஸ்வணி குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் டிரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் ஐ.பி.எல். 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. 

Read Entire Article