
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1-ந் தேதி(நேற்று) சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவின்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த நடிகர் தனுஷிடம் 'வடசென்னை 2' படத்தின் அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்த 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்தின் 2-வது பாகம் எப்போது வெளியாகும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட காலமாக நிலவி வருகிறது.
இது குறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் பலமுறை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு 'வடசென்னை 2' நிச்சயம் வரும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த உறுதியான தகவல் எதையும் வெற்றிமாறன் தெரிவிக்கவில்லை. இதனால் 'வடசென்னை 2' திரைப்படம் வருமா? என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.
இந்த நிலையில், 'குபேரா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், 'வடசென்னை 2' படம் குறித்த கேள்விக்கு, 'அடுத்த வருடம்' என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "2018-ம் ஆண்டு முதல் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அடுத்த வருடம்.." என்றார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தனுஷ் சொன்ன தகவலின்படி, 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கப்படலாம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.