
சென்னை,
ரெயிலில் பயணம் செய்ய உயர் வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளில் இருக்கை வழங்கப்படும். இந்த நடைமுறை 2006-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த திட்டத்தில் மத்திய ரெயில்வே வாரியம் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது, சாதாரண பெட்டியில் 2-ம் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி ஒருவர் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி மட்டுமல்லாமல், 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
அதேபோல, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 2-ம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணமின்றி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இந்த திட்டம் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது என மத்திய ரெயில்வே வாரியத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.