சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (23.04.2025) சென்னை, கோடம்பாக்கம், புலியூர், அருள்மிகு பாரத்வாஜேசுவரர் திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதியில் ரூ.1.15 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளித் தகடு போர்த்தப்பட்ட புதிய அதிகார நந்தியினை திருக்கோயில் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்துதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “சென்னை மாவட்டம், புலியூர், அருள்மிகு பாரத்வாஜேசுவரர் திருக்கோயிலுக்கு வெள்ளித்தகடு போர்த்திய புதிய அதிகார நந்தி வாகனம் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் புலியூர், அருள்மிகு பாரத்வாஜேசுவரர் திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதியில் ரூ.1.15 கோடி செலவில் 90 கிலோ 979 கிராம் எடை கொண்ட வெள்ளியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள வெள்ளித் தகடு போர்த்தப்பட்ட புதய அதிகார நந்தியினை இன்று (23.04.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இணை ஆணையர்கள் கோ.செ.மங்கையர்கரசி, இரா.வான்மதி, ஜ.முல்லை, மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன் மோகன், துணை ஆணையர்கள் இரா.ஹரிஹரன், ஜெயா, மாநகராட்சி உறுப்பினர் எளிசபெத் அகஸ்டியன், உபயதாரர் ஈ.டி.சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ரூ.1.15 கோடி செலவில் கோடம்பாக்கம், அருள்மிகு பாரத்வாஜேசுவரர் திருக்கோயிலுக்கு வெள்ளித் தகடு போர்த்தப்பட்ட புதிய அதிகார நந்தி வாகனத்தை வழங்கினார் அமைச்சர் சேகர் பாபு appeared first on Dinakaran.