சென்னை, ஏப்.25: இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ஐபிஎல் போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்து 90 நிமிடத்தில், விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வரவேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி மெட்ரோ ரயிலில் இலவச பயணம் appeared first on Dinakaran.