சென்னை,
கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மாநாடு' திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
'மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், 2021-ம் ஆண்டு நடிகர் சிம்பு, படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட்டது தொடர்பாக 'வந்தான்... சுட்டான்.. செத்தான்..ரிபீட்டு' என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை டேக் செய்து மீண்டும் மாநாடு விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.