ராயக்கோட்டை : ராயக்கோட்டையில், விலை சரிவால் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை விவசாயிகள் சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்டத்தில் பறிக்கும் தக்காளி பழங்களை, ராயக்கோட்டையில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால், ராயக்கோட்டைக்கு வெளியிடங்களிலிருந்து வியாபாரிகள் வருகை சரிந்துள்ளது. இதையடுத்து, தக்காளி விலையும் சரிந்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி முதல் தரம் ரூ.200க்கும், 2ம் தரம் ரூ.150க்கும், 3ம் தரம் ரூ.100க்கும் குறைவாகவே விற்பனையாகிறது.
இதனால், சாகுபடி செலவு, பறிப்பு கூலி, மண்டிக்கு எடுத்துச்செல்லும் வாகன செலவு, மண்டி கமிஷன் தொகைக்கு கூட கட்டுப்படியாகாது என்பதால், விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை திரும்ப எடுத்து செல்லாமல், சாலையோம் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ராயக்கோட்டை மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, விற்பனைக்காக கொண்டு வந்த தக்காளியை வீட்டிற்கு கொண்டு செல்ல மனமின்றி சாலையோரம் வீசிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,’ என்றார்.
The post ராயக்கோட்டையில் விலை சரிவால் தக்காளியை சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள் appeared first on Dinakaran.