காட்சிப்பொருளாக மாறிய காரமடை ரயில்வே சுரங்க பாதை

3 hours ago 1

*2 கிமீ சுற்றி வரும் அவலம்

காரமடை : காரமடை நகராட்சி 25, 26, 27வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர், மரியபுரம், குலாளர் புரம், சைக்கிள் கடை ராமசாமி சந்து, ஆர்வி நகர், சொசைட்டி காலனி, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அபாயகரமாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து காரமடை நகர்ப்பகுதிக்கு வந்து சென்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைகளுக்காகவும், ரயில்வே கேட்டை கடந்து வந்தனர்.

ரயில்வே கேட் பயணிகள் ரயில் மற்றும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேட்டுப்பாளையம் வந்து செல்லும் போது கேட் மூடப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர், மருத்துவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக கோவை செல்வோரும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய அரசு காரமடை நகருக்கு வந்து செல்ல வசதியாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு சில மாதங்கள் மட்டுமே அப்பகுதி மக்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். அதன்பின், முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. இப்பகுதி பொதுமக்களின் பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்கு பின்னர் இந்த சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது.

அதன் பின்னர், பெய்த மழையிலும் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டு ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மேற்கண்ட பகுதிகளில் இருந்து மரியபுரம் வந்து வேகமாக செல்லும் வாகனங்களுக்கிடையே ஆபத்தான முறையில் மேம்பாலத்தில் ஏறி மறுபுறம் சுமார் 2 கிமீ தொலைவிற்கு சுற்றிச்சென்று வருகின்றனர்.

இதுகுறித்து 27வது வார்டு கவுன்சிலர் வனிதா சஞ்சீவ் கூறுகையில்,“முறையான திட்டமிடுதல் இன்றி இந்த ரயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் உள்ளன.

இதனால் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் அன்றாட தேவைகளை வாங்க செல்வோரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும், ரயில்வே நிர்வாகத்திடமும் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ரயில்வே சுரங்கப்பாதை கட்டியும் பலன் இல்லாமல் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது” என்றார்.

பொதுமக்கள் கூறுகையில்,“சுரங்கப்பாதையில் முழுவதுமாக தண்ணீர் தேங்கியது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவ்வப்போது நகராட்சி நிர்வாகமும் தண்ணீரை வெளியேற்றும். அதன் பின்னர் அதற்கடுத்த பெய்த மழையால் நீண்ட தண்ணீர் தேங்கியுள்ளதால் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் தண்ணீரில் மிதந்தபடி உள்ளன.

இதனால், அங்கு கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர வேண்டும் என்றாலும் மேம்பாலம் ஏறி பின் கீழ் இறங்கி அதன் பின்னர் இப்பகுதிகளுக்கு வரவேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதனால், நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.எனவே, ரயில்வே நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை துறையினரும், காரமடை நகராட்சியும் இணைந்து கட்டியும் பலனின்றி, வெறும் காட்சிப்பொருளாக இருந்து வரும் இந்த ரயில்வே சுரங்கப்பாதையை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

The post காட்சிப்பொருளாக மாறிய காரமடை ரயில்வே சுரங்க பாதை appeared first on Dinakaran.

Read Entire Article