டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்கிய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை, ‘பாகிஸ்தானியர்களின் சகோதரி’ என குறிப்பிட்ட ம.பி. பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்கிய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை, ‘பாகிஸ்தானியர்களின் சகோதரி’ என ம.பி. பாஜக அமைச்சர் கூறியுள்ளார்.”பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கத்தின் ஒரு அமைச்சர், நமது துணிச்சலான மகள் கர்னல் சோபியா குரேஷியைப் பற்றி மிகவும் அவமானகரமான, வெட்கக்கேடான மற்றும் மோசமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பஹல்காமின் பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்க விரும்பினர், ஆனால் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ முழுவதும் நாடு ஒன்றுபட்டது.
பாஜக-ஆர்எஸ்எஸ் மனநிலை பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. முதலில் பஹல்காமில் வீரமரணம் அடைந்த கடற்படை அதிகாரியின் மனைவி சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார், பின்னர் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் மகள் துன்புறுத்தப்பட்டார், இப்போது பாஜக அமைச்சர்கள் நமது துணிச்சலான பெண் சோபியா குரேஷி பற்றி இதுபோன்ற அநாகரீகமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
பிரதமர் மோடி உடனடியாக அத்தகைய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
The post ராணுவ கர்னல் சோபியா குரேஷியை, ‘பாகிஸ்தானியர்களின் சகோதரி’ என குறிப்பிட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.