*பேரிகார்டுகள் வைக்க கோரிக்கை
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியை அழகுபடுத்தும் முயற்சியில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் வேறு துறையினர் வேலை செய்யும்போது மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று வேலை செய்யவேண்டும்.
மக்கள் பாதிக்காதவகையில் வேலை முடிந்தவுடன் வேலை நடந்த பகுதியை சீரமைத்துக்கொடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இதனை சில துறையினர் கண்டுகொள்ளாமல் அவர்களது வேலையை முடித்துவிட்டு சாலையை சீரமைக்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால் சாலையில் உடைக்கப்பட்ட பகுதியில் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் சற்குண வீதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த வழியாக பைக்கில் வந்தவர் விழுந்து படுகாயம் அடைந்தார்.
பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பாதுகாப்பாக செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்காது என சமூக ஆர்வலர்கள் கூறினர். தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் சாலையோரம் கேபிள்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அனந்தன் பாலம் பகுதி வரை கேபிள் பதிக்கும் பணி நடந்துவருகிறது. கடந்த காலங்களில் கேபிள்கள் பதிக்கும் போது சாலையோரம் நீளமாக பள்ளம் தோண்டப்பட்டு அதில் கேபிள்கள் பதிப்பார்கள்.
ஆனால் தற்போது தொழில்வளர்ச்சி காரணமாக சாலையோரம் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு போர்போடும் எந்திரம் கொண்டு கேபிள்கள் நிலத்தின் உள்ளே பதிக்கின்றனர்.
ராணித்தோட்டம் பகுதியில் பணி நடப்பதால் சாலையோரம் 6 பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழும் நிலை உருவாகியுள்ளது. விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு பள்ளத்தை சுற்றி பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post ராணித்தோட்டம் பகுதியில் கேபிள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.