
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 19-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தது. பரபரப்பான அந்த ஓவரை வீசிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்தீப் பிஹானி சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஏனெனில் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட பிறகு சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி தோற்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர் தரப்பில் சமர்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த காலங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கி தண்டனையை அனுபவித்தனர். அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சூதாட்ட புகாரில் சிக்கியதால் 2 வருடங்கள் (2016-2017) ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.