டெல்லி,
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, ''இந்திய நிலப்பகுதிக்குள் சீனப்படையினர் நுழையவில்லை என்று பிரதமர் மோடி மறுத்தார். ஆனால், ஏதோ காரணத்துக்காக சீனாவுடன் அவர்களது படையினரின் ஊடுருவல் குறித்து இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியது. நமது ராணுவ தளபதியும், சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் இருப்பதாக கூறினார்'' என்று ராகுல்காந்தி பேசினார்.
இந்நிலையில், அதற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் 3-ந்தேதி ஆற்றிய உரையில், இந்தியா-சீனா எல்லை நிலவரம் குறித்து இந்திய ராணுவ தளபதி கூறியதாக பொய் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி கூறியதுபோல், ராணுவ தளபதி எங்குமே பேசியது இல்லை தேசநலன் சார்ந்த பிரச்சினைகளில் ராகுல்காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
இந்திய நிலப்பரப்பு, சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்றால், அது கடந்த 1962-ம் ஆண்டு போரின் விளைவாக அக்சாய் சின் பகுதியில் உள்ள 38 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பகுதியும், 1963-ம் ஆண்டு பாகிஸ்தானால் சீனாவுக்கு சட்டவிரோதமாக தாரைவார்க்கப்பட்ட 5 ஆயிரத்து 180 சதுர கி.மீ. நிலப்பகுதியும்தான் ஆகும்.
அந்த ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. எனவே, அந்த காலகட்டம் குறித்து ராகுல்காந்தி சுயபரிசோதனையில் ஈடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.