சென்னை: தமிழ்நாடு, கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி, ஐகோர்ட் உத்தரவின்படி தமிழ்நாடு, கேரள வனத்துறையுடன் இணைந்து கோவை, பாலக்காடு வனப்பகுதிகளில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் கண்டறிப்பட்டன. அதில், 9 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு யானைகள் கடக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 சுரங்கப்பாதைஅமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், போத்தனூர் மதுக்கரை ஆகிய பகுதியில் ரயில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் சென்சார் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கோபுரங்களிலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அதி நவீன கேமராக்கள் யானைகள் ரயில் தண்டவாளங்களில் இருந்து 150 மீட்டர் தொலைவில் வந்தால் உடனடியாக, அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளருக்கு மற்றும் ரயில் ஓட்டுனருக்கு தகவல்களை அனுப்பும் வகையில் செயல்படும். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது. 2022 அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பாலக்காடு போத்தனூர் ரயில் வழித்தடங்களில் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post ரயில்வேத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கையால் அக்டோபர் 2022 முதல் ரயில் மோதி யானைகள் ஏதும் பலியாகவில்லை: சென்னை ஐகோர்ட்டில் தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.