ரஞ்சி கோப்பை: கருண் நாயர் சதம்.. தமிழக அணிக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 264 ரன்கள் குவிப்பு

2 hours ago 2

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த ஜம்மு காஷ்மீர், மும்பை (ஏ), விதர்பா, குஜராத் (பி), அரியானா, கேரளா (சி), சவுராஷ்ரா, தமிழ்நாடு (டி) ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

6 நாள் இடைவெளிக்கு பிறகு காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இதில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விதர்பா - தமிழ்நாடு அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணிக்கு தொடக்க கட்டத்தில் தமிழக பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஆன அதர்வ தைடே ரன் எதுவுமின்றியும், துருவ் ஷோரே 26 ரன்களிலும், ஆதித்யா தாகரே 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து அணியை அனுபவ வீரரான கருண் நாயர் மற்றும் டேனிஷ் மாலேவார் மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் விதர்பா வலுவான நிலையை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் சதம் அடித்தார். இதனிடையே யாஷ் தாகூர் 13 ரன்களிலும், கேப்டன் அக்ஷய் வாட்கர் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் முடிவில் விதர்பா 6 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது. கருண் நாயர் 100 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தரப்பில் விஷய் சங்கர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Read Entire Article