
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் சுனில் நரேன் 11 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய குர்பாஸ் 35 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ரகுவன்ஷி மற்றும் ரசல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ரகுவன்ஷி 44 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடி சிக்சர் மழை பொழிந்த ரசல் 22 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.