
திருப்பதி:
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம தெலுங்கு யுகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மார்ச் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. பாரம்பரிய முறைப்படி கோவிலை சுத்தம் செய்யும் நடைமுறைக்காக அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான 4 மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே போல் யுகாதி அஸ்தனத்தை முன்னிட்டு மார்ச் 30-ம் தேதி, சகஸ்ர தீபஅலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25 மற்றும் மார்ச் 30 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனத்திற்கு விஐபி புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கூறி உள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.