யு.ஜி.சி.யின் புதிய விதி: டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

2 hours ago 1

புதுடெல்லி,

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இது குறித்து மத்திய கல்வித்துறை மந்திரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதி இருந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. மாணவரணி செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன், "கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்கள், தற்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகளை யு.ஜி.சி. மூலம் வெளியிட்டுள்ளனர். இந்த யு.ஜி.சி. வரைவை கண்டித்து தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றி உள்ளார். முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படுகிறது.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்க உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். வி.சி.க., இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்" என்று அவர் கூறினார். 

Read Entire Article