
தலையங்கம்
சின்னஞ்சிறு எறும்பு கூட்டம் கூட தங்களுக்கென்று ஒரு புற்றை கட்டுகிறது. அதுபோல சிட்டுக்குருவி தனக்கென ஒரு கூடு கட்டுகிறது. இவ்வாறு உலகில் பிறக்கும் அனைத்து மிருகங்களும், பறவைகளும், பூச்சிகளும் தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. அதுபோல மனித வாழ்க்கைக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்பதே அத்தியாவசிய தேவையாக கருதப்படுகிறது. மழை, வெயில், குளிரிலிருந்து மனிதன் பாதுகாப்பாக வாழ வீடு இருப்பதும் அவசியமானதாகும். மத்திய அரசும், தமிழக அரசும் ஆளுக்கு ஒரு வீடு என்பதையே லட்சியமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்த இலக்கை நோக்கித்தான் மத்திய அரசாங்கம் பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற வீட்டுவசதி திட்டத்தை தீட்டி, அதற்கு வழங்கப்படும் மானியத்தில் தமிழக அரசு 62 சதவீதமும், மத்திய அரசாங்கம் 38 சதவீதமும் வழங்குகிறது. மீதி தொகையை வீடு கட்டுபவர் தன் சொந்த சேமிப்பில் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் வாங்கியோ செலவழிக்கிறார்கள். இதுதவிர தமிழக அரசும் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஆண்டுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் இப்போது அமலில் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழக அரசு ரூ.3.50 லட்சம் மானியமாக வழங்குகிறது. இவ்வாறு அனைவருக்கும் வீடு என்ற இலக்கோடு மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக இருப்பதுபோல, அவர்கள் தரும் மானியத்தோடு பயனாளிகளும் தங்கள் வசதிக்கேற்ப வங்கிகளில் கடன் வாங்கி வசதியான வீடுகளை கட்டிக்கொள்ளும் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்குப்படி, வீட்டு நிதி நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் வீட்டுக்கடன் ரூ.33 லட்சத்து 53 ஆயிரத்து 668 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடுத்தர வருவாய் பிரிவை சேர்ந்தவர்கள் 44 சதவீதம் வாங்கியிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் 39 சதவீதமும், உயர் வருவாய் பிரிவினர் 17 சதவீதமும் வீட்டு கடன் வாங்கியிருக்கிறார்கள். ஆக மொத்த கடன்களில் யார்-யார்? எந்த அளவில் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்ற கணக்கை தேசிய வீட்டு வசதி வங்கிகளின் அறிக்கைதான் பகுப்பாய்வு செய்து தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி கொடுத்துள்ள வீட்டுக்கடன் தொகை அதற்கு முந்தைய ஆண்டு கொடுத்த தொகையை விட 14 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அனைவருக்கும் சொந்த வீடு கட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆசை வளர்ந்து இருப்பதும், நகரமயமாக்கல் அதிகரித்துக்கொண்டே இருப்பதும், நகர்ப்புற விரிவாக்கங்களும் மட்டுமல்லாமல் மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் அனைவருக்கும் வீடு என்ற குறிக்கோளை நிறைவேற்ற கொண்டுவரும் திட்டங்களும் வழங்கிவரும் மானியங்களுமே இவ்வாறு வீட்டு கடன் தொகை பெருகிக்கொண்டு இருப்பதற்கான காரணங்களாக கருதப்படுகிறது. இவ்வாறு வீட்டு கடன் பெற்றவர்களில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களே முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த கடன்களில் தென் மாநிலங்கள் மட்டும் 35.02 சதவீதம் பெற்று இருப்பதை பார்த்தால் ஆளுக்கொரு வீடு லட்சியத்தை தமிழ்நாடு அடையப்போகும் நாள் தூரத்தில் இல்லை.