
சிம்லா,
இமாசலப்பிரதேசம் சோலன் மாவட்டத்தில் சுபாத்து கண்டோன்மெட் பகுதியில் சிலரது முகநூலில் நேரலை வீடியோ ஒன்று வந்தது. இதைப்பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோவில் தோன்றிய 20 வயது இளம் பெண் ஒருவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கு யாரும் காரணம் இல்லை என்று கண்ணீருடன் கூறினார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்து, அந்த பெண்ணின் இருப்பிடம் அருகில் உள்ள ஹோல்கி கிராமம் என்பதை அறிந்தனர். அந்த பெண்ணின் தற்கொலையை தடுக்க போலீசார் அங்கு விரைந்தனர். இதனிடையே சுபாத்து பகுதியில் உள்ள சந்தையில் இருந்த வியாபாரிகள் சிலரும் அந்த வீடியோவை பார்த்தனர். அவர்கள் உள்ளூர்காரர்கள் என்பதால், இளம் பெண்ணின் தாய் மற்றும் அண்ணனை தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர்களும் சந்தையில்தான் இருந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு விரைந்து ஓடினர். அதற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் கிடந்த அவரது உயிரற்ற உடலை பார்த்து, குடும்பத்தினர் கதறி அழுதனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.