
திருப்பூர்,
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்மதி (வயது25). இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் உள்ள வித்யாலயம் அடுத்த பாரதி நகரில் வசித்துக் கொண்டு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து பெண் பார்க்க அவ்வப்போது மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் வரும்போது ராஜ்மதி தன்னை அலங்கரித்து காத்திருப்பார். அவர்களும் பெண்ணை பார்த்து செல்வார்கள். அதன்பின்னர் சம்மதம் சொல்வார்கள்என வழிமேல் விழி வைத்து ராஜ்மதி காத்திருந்தார். காத்திருந்து, காத்திருந்து காலம் கடந்ததே தவிர கைபிடிக்க யாரும் முன்வரவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க வருவதும், பின்னர் மாப்பிள்ளையின் பதிலுக்காக ராஜ்மதி காத்திருப்பதும் வாடிக்கையாகி போனது.
தன் வயது உள்ள பெண்கள் குழந்தை- கணவருடன் செல்வது ராஜ்மதிக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியது. தன்னையும் பலபேர் பெண் பார்த்துச் சென்றும் ஒருவர் கூட வாழ்க்கை துணையாக வர மறுக்கிறார்களே என மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் ராஜ்மதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்தமத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.