
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் உள்ளன. தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குற்றால சீசன் காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை போன்ற நாட்களில் குற்றாலத்தின் நீர்வரத்து இருக்கும் போது, பொதுமக்கள் இங்கு மகிழ்ச்சியாக குளித்து செல்வர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை விடுமுறை தினத்தன்றும் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.