மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு: சாலையோரம் குவிக்கப்பட்ட தர்பூசணியை ருசித்த யானை

2 hours ago 1

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வனத்திலிருந்து வெளியேறிய யானை ஊட்டி சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ருசித்து சாப்பிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் வேளைகளில் வனப்பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் விலை நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.

இதுவரை இந்த யானை மனிதர்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை என்றாலும் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஜாலியாக மேட்டுப்பாளையத்தில் ஊட்டி சாலையில் நடந்து வந்தது. தொடர்ந்து அங்கு தனியார் பெட்ரோல் பங்க் அருகே விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்தது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முற்பட்டு சப்தமிட்டும் எவரையும் சட்டை செய்யாமல் தர்பூசணி பழங்களை தின்றது. இதையறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானை பாகுபலியை வனத்திற்குள் விரட்டியடித்தனர். இதனால் ஊட்டி சாலையில் சற்று நேரம் பரபரப்பாக சூழல் ஏற்பட்டது.

The post மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு: சாலையோரம் குவிக்கப்பட்ட தர்பூசணியை ருசித்த யானை appeared first on Dinakaran.

Read Entire Article