சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதாக பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 துண்டுகளாக உடைத்து கூடுதல் பணி நேர ஊதியம் (ஓ.டி.), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பறித்து 4 ஆண்டுகளாக பழிவாங்கி வருகிறது.