மூடநம்பிக்கையின் உச்சம்: ஆவி புகுந்துள்ளதாக தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை; கண் பார்வை பாதிப்பு

3 hours ago 2

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.

6 மாதமான அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த ராகவீர் தடக் என்பவரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். தன்னை மாந்திரீகன் என்று கூறிக்கொண்ட ராகவீர் தடக், குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மூடநம்பிக்கையை நம்பிய தம்பதி, குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு ராகவீர் தடக் இடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம் வீட்டில் செங்கல்களை அடுக்குவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ வைத்துள்ளார். பின்னர், பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை ராகவீர் தடக் கட்டி தொங்க விட்டுள்ளார்.

தீயின் முன் கட்டி தொங்கவிடப்பட்ட பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தையை நேற்று சிவ்புரி மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்துள்ளனர். குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட டாக்டர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின்தான் தெரியவரும் என்று கூறினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Read Entire Article