
மும்பை,
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியேரா லியோனிக் குடியரசில் இருந்து கடந்த 19ம் தேதி மராட்டியத்தின் மும்பைக்கு பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த பயணி தனது வயிற்றில் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கெப்சுல் வடிவில் கடத்தி கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை மருத்துவர்கள் உதவியுடன் வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர். 1.139 கிலோ கிராம் எடையுள்ள மொத்தம் 67 பொட்டங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 11 கோடியே 39 லட்ச ரூபாய் ஆகும். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.