மும்பை: மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தால், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கைசர்-ஐ-ஹிந்த் கட்டிடத்தில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று (ஏப். 27) அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அமலாக்கத்துறையின் அலுவலகமானது ஐந்து மாடிக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.21 மணியளவில் தீயின் தீவிரம் மூன்றாவது மாடிக்கு பரவியது. தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. இந்த தீ விபத்தால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்றுகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாததால், இதன் தாக்கம் குறித்து முழுமையாக கிடைக்கவில்லை’ என்றனர்.
The post மும்பை ‘ஈடி’ ஆபீசில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானதா? appeared first on Dinakaran.