சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
The post முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வேலை மோசடி வழக்கை சிபிஐயிடம் இருந்து மாற்ற முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.