முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1 day ago 4

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அத்துடன் 18 ஆண்டு கால விராட் கோலியின் கோப்பை ஏக்கம் தணிந்தது. பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர்குமார், குருணல் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அந்த அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையாக கிட்டியது. வெற்றியை பெங்களூரு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில், முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

"சபாஷ்.. ஆர்.சி.பி. பல ஆச்சர்யங்கள் நிறைந்த சீசனுக்கு நிறைவான ஒரு முடிவு. விராட் கோலி இந்தக் கோப்பைக் கனவை பல ஆண்டுகளாக சுமந்துள்ளார். இப்போது இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து அடுத்த சீசனில் சிறப்பான COME BACK-யை எதிர்பார்க்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article