
லீட்ஸ் ,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தற்போது வரை விக்கெட் இழப்பின்றி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. இது கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி தற்போது பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "புதிய பந்தில் பவுலிங் செய்யப்படும் சூழ்நிலைகளை கடப்பது இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். 5வது நாள் முடிவில் இந்தியா வெற்றி பெற்ற அணியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா வெற்றி பெற 10 வாய்ப்புகளை மட்டுமே உருவாக்க வேண்டும்.
அத்துடன் அவர்கள் கேட்சுகளை பிடிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு, தாங்கள் வெற்றி பெறும் அணி என்று நினைக்கும். பந்து வீச்சாளர்களை நன்றாகப் பயன்படுத்தும் பொறுப்பு கில்லுக்கு உள்ளது" என்று கூறினார்.