பொது கட்டிட உரிமம் பெறுவதற்கான விதிகளில் திருத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

7 hours ago 1

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் பொது கட்டிட உரிமம், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்றிதழ் மற்றும் இந்த சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்ட நியமனம் பெற்ற என்ஜினீயர்கள் குறித்த விவகாரங்களில் தமிழ்நாடு பொது கட்டிட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

பொது கட்டிட உரிமம் பெறுவதற்கு பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற என்ஜினீயர்களிடம் இருந்து கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்று பெற்று அளிக்கப்பட வேண்டும். பொது கட்டிடத்துக்கான உரிமத்தை இணைய வழியாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக https://www.tnesevai.tn.gov.in/ என்ற இ-சேவை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், பொது கட்டிடங்களுக்கான உரிமத்தை இணைய வழியாக பெற்றுக்கொள்ளலாம். கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் வரை அக்கட்டிடத்தின் பொது கட்டிட உரிமம் செல்லுபடியாகும்.

ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் இருந்தால், இ சேவை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொது கட்டிடங்களுக்கான உரிமத்தின் காலம் முடியும் தருவாயில் இருந்தால் இ-சேவை இணையதளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். அதேபோன்று எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையும் தற்போது எளிமைபடுத்தப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கும் தற்போதைய நடைமுறை மாற்றப்பட்டு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி இ சேவை இணையதளம் வாயிலாக சுய சான்றளிப்பின் அடிப்படையில் சுகாதார சான்றிதழை பெறலாம். இந்த சான்றிதழை பெறுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய பொது சுகாதார துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article