
சென்னை,
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
28 மணிநேர பயணத்திற்கு பிறகு 26-ந்தேதி மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் அடைய உள்ளது. பூமியில் இருந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல், விண்வெளி நிலையத்தை விட குறைந்த உயரத்தில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன், அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் செல்கின்றனர். பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8-வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.