முதலமைச்சர் பேச்சுக்கு ஆதரவாக தனது சேமிப்பில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதி அனுப்பிய எல்கேஜி மாணவி

2 months ago 5

 

கடலூர், பிப். 24: முதலமைச்சர் பேச்சுக்கு ஆதரவாக எல்கேஜி பயிலும் சிறுமி, தன் சேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை முதல்வரின் சிறப்பு திட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த திருப்பெயரில், நேற்றுமுன்தினம் நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மண்டல மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக்கூடிய ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும், என கூறுகிறார்கள். ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும், புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் திட்டங்கள் தொடரும் என ஆவேசமாக பேசினார். இந்நிலையில், கடலூரை சேர்ந்த எல்கேஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி, தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூ.10 ஆயிரத்தை தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி அனுப்பி உள்ளார்.

மேலும் சிறுமி நன்முகை நிதி வழங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் சிறுமி பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம், எனது பெயர் நன்முகை, நான் எல்கேஜி படிக்கின்றேன். இன்று நீங்கள் கடலூரில் பேசியபோது மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள். தமிழ்மொழியை காக்க பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள்.

எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன். தமிழே அறன், கடலூரில் இருந்து நன்முகை. வணக்கம் ஐயா. இவ்வாறு சிறுமி பேசியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதற்கு ஆதரவாக கடலூரை சேர்ந்த எல்கேஜி படிக்கும் சிறுமி ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ள சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post முதலமைச்சர் பேச்சுக்கு ஆதரவாக தனது சேமிப்பில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதி அனுப்பிய எல்கேஜி மாணவி appeared first on Dinakaran.

Read Entire Article