
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிடும்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்-அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்" என்று அமித்ஷா கூறினார்.
அடுத்ததாக, நீங்கள் அ.தி. மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்கள்? என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது" என்று அமித்ஷா பதில் அளித்தார்.