மு.க. ஸ்டாலின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு

6 hours ago 1

சென்னை,

போலீசார் விசாரணையின் போது மரணம் அடைந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது இளைஞர் மரணம் அடைந்தது தொடர்பாக ஆறுதல் கூறிய முதல் அமைச்சர் முக ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிலையில், முதல் அமைச்சரின் உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. சாரி என்பது தான் உங்கள் பதிலா?

அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? "என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?

வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்? அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு எப்.ஐ.ஆர் கைது எல்லாம் நடக்கிறது.

உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article