
சென்னை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இந்தியாவில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.
இதனிடையே சர்வதேச போட்டிகள் மீண்டும் தொடங்க இருப்பதால் சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு வீரர்கள் குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சாம் கர்ரன், ஜேமி ஓவர்டான் ஆகிய இருவரை தவிர மற்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.