
நேபிடாவ்,
மியாமர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 ஆயிரத்து 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் மியான்மரில் தற்போது அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மதியம் 1.31 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.67 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.17 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று காலை 5.46 மணியளவில் ரிக்டர் 3.4 அளவிலும், அதிகாலை 12.41 மணியளவில் ரிக்டர் 3.4 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.