ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும், சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளவும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் பாதி பகுதியில் சில மின் விளக்குகள் எரிந்தும், மீதமுள்ள பகுதியில் மின்விளக்குகள் எரியாமலும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இரவில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரயில்வே மேம்பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மின்விளக்குகள் பழுது காரணமாக இருள் சூழ்ந்து காணப்படும் பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.