மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது: ஜெகதீப் தன்கர் பேச்சு

1 week ago 3

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செவித்திறன், கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 3வது தேசிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது: கல்வி, எளிதில் அணுகத்தக்க சூழல், நலன் சார்ந்த திட்டங்கள் இவை அனைத்திலும் செவித்திறன்- கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம் என்பது இந்த கருத்தரங்கின் மையப்பொருளாகும். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு இல்லாமல் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற இலக்கு சாத்தியமாகாது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயக்க ரீதியாக செயல்பட பிரதமர் உறுதியுடன் இருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளின் திறமையை பயன்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பல கொள்கைகள் உருவாக்கப்பட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்தும் நிலைமைகளை கடந்து வெற்றி ஈட்டுபவர்களாக மாற்றுத்திறனாளிகள் விளங்குகிறார்கள். இந்திய பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஏராளமான பதக்கங்களை வென்றிருப்பது இதற்கு சான்று. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான உணர்திறன் தேவை. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.லட்சுமண், திருச்சி சிவா, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் நசிகேத ரவுத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது: ஜெகதீப் தன்கர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article