மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

2 months ago 10

சென்னை: மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய விதிகளை யுஜிசி வெளியிட்டுள்ளதற்கு ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையம் ஆகிய யூஜிசி வெளியிட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான மாநில அரசின் உரிமைகள் முற்றாக பறிக்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் குழுவும் நியமன பொறுப்பும் மாநில ஆளுநரையே சார்ந்தது என்று இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இது மிகுந்த வேதனைக்குரியது. கடுமையான கண்டனத்துக்குரியது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் காலத்தில் கல்வியில் மாநில உரிமைகளை முற்றாகப் பறிக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து யுஜிசி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆகிய மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. அந்த காரணத்திற்காகவே யுஜிசிஐ அழிக்க வேண்டும் என்ற மதவாத நோக்கில் செயல்பட்டுவந்த ஒன்றிய பாஜக அரசு இப்பொழுது யுஜிசி யின் வாயிலாகவே மாநில உரிமைகளை பறிக்க முற்படுவது நகை முரணாக தோன்றுகிறது .

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கின்ற முழு அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மமக வலியுறுத்தி வருகிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் மாற்றங்கள் எவற்றைச் செய்தாலும் தமிழ்நாடு கொதிகலனாக மாறும் என்பது தவிர்க்க முடியாததாகும்.

உயர்கல்வியில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட முதல் நிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் உயர் கல்வி கட்டமைப்பை சிதைக்கின்ற வகையிலான மாற்றங்களை ஒன்றிய அரசின் கைப்பாவை ஆகிய யூஜிசி கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த மாற்றங்கள் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article