சென்னை: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தனர்.
ஆனால் இதை மறுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறை காரணமாக, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது. இதற்குப் பின்னரும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் அர்ச்சனா பட்நாயக் அனைத்துக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 18ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளான, பாஜக, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
The post மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.