சென்னை: மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டபடியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக் கொள்ளும் நிலையில், இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடிக்கு, பாஜ ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?. தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவியோ, தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதல்வர், ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப் பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி, தமிழ்நாடு பேரவையின் மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசினப்படுத்தினார். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மாநில அரசிற்கு கட்டுப்பட்டு தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமரே ஒத்துக்கொள்கிறார்: இனி என்ன சொல்ல போகிறார் ஆர்.என்.ரவி? அமைச்சர் ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.