சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இப்பள்ளியில், தற்காலிக பட்டதாரி ஆசிரியராக உள்ள, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நெய்யமலையை சேர்ந்த இளையகண்ணு (37), 10, 11ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளிமலையை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும், தோழிகள் 4 பேரிடமும் ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் புகாரின்படி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசார், பட்டதாரி ஆசிரியர் இளையகண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுபற்றி விசாரித்த சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், தற்காலிக பட்டதாரி ஆசிரியர் இளையகண்ணுவை நிரந்தர பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பட்டதாரி ஆசிரியர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.