கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அந்த பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராததால் பள்ளியின் தலைமையாசிரியர் சக மாணவிகளிடம் விசாரித்தார். சரியான தகவல் கிடைக்காததால் அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் மாணவிக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்துள்ளது.
பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்கள் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமடைந்ததாகவும், கருக்கலைப்பு செய்ததால் பள்ளிக்கு வரவில்லை என்றும் அவரது தாயார் கூறியிருக்கிறார். இதை வெளியே கூறினால் அவப்பெயர் ஏற்படும் என மறைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்கும்படி தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் சின்னசாமி (வயது57), ஆறுமுகம் (45), பிரகாஷ் (37) ஆகியோரை போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்கள் 3 பேரையும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களுக்காக வாதாடப்போவதில்லை என கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமை, பெற்றோர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களை நம்பித்தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம், பள்ளியில் அவர்களுக்கு யார் பாதுகாப்பு? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. திமுக ஆட்சியில் மாணவிகள்,பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்து அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில், நாளை மறுநாள் (8.2.2025 - சனிக் கிழமை) காலை 10 மணியளவில், 'கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.