திருப்பூர் பஸ் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

3 hours ago 1

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை, செங்காளிபாளையம் கிராமம், சாம்ராஜ்பாளையம் பிரிவில் இன்று (6.2.2025) காலை சுமார் 8.45 மணியளவில் திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த TN34 T 4050 என்ற பதிவெண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று அதே திசையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியைக் கடந்துசெல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், விருமாண்டம்பாளையம், தில்லை நகரைச் சேர்ந்த திரு.பெரியசாமி (வயது 19) த/பெ.சந்திரன் மற்றும் குன்னத்தூர் கிராமம், சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த திரு.ஹரிகிருஷ்ணன் (வயது 19) த/பெ.செந்தில்குமார் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article