மாசி மாத பிரதோஷ வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

3 hours ago 1

வத்திராயிருப்பு: மாசி மாத பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (பிப்.25) முதல் வரும் 28ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை மாசி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி விருதுநகர் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.

பக்தர்கள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே தணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு புறப்பட்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வரிசையாக மலையேறிச்சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். மாலையில் மாசி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

The post மாசி மாத பிரதோஷ வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article