பெங்களூரு: கர்நாடகாவில் மருத்துவ உதவி செய்வது போல் நடித்து மாணவி உட்பட 30 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மெடிக்கல் கடை ஓனரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்துக்கடை நடத்தி வரும் முகமது அம்ஜத் (50) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டி, அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து தனது வலையில் விழ வைத்தார்.
பின்னர் அவர்களை தனக்கு சொந்தமான வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறாக அவர் பள்ளி மாணவி உட்பட 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர், சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் எஸ்பி உமா பிரசாந்திடமும் புகார் செய்தனர்.
இவ்விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட அம்ஜத் பள்ளி மாணவி உட்பட 30க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். கைதான முகமது அம்ஜத் மீது தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் 67,67 (ஏ) மற்றும் 67 (பி) பிரிவுகள் மற்றும் 77,294 மற்றும் 64 பிரிவுகள் உள்ளிட்ட சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், பிரிவுகள் 4,6,14 மற்றும் 15 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி வழங்குவது என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை தனது வலையில் சிக்கவைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி உமா பிரசாந்த் கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் உலாவும் ஆபாச வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம். மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
The post மருத்துவ உதவி செய்வது போல் நடித்து பள்ளி மாணவி உட்பட 30 பெண்கள் பலாத்காரம்: கர்நாடகாவில் மெடிக்கல் கடை ஓனர் கைது appeared first on Dinakaran.