தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் இந்த முயற்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து இருபுறமும் பிரியும் வாய்க்கால்கள் மூலமாக, 53 பாசன குளங்கள் நிரம்பி, சுமார் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுபோன்று, பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியான பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் நீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு விளங்குகிறது.