
புதுடெல்லி,
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
இந்த சூழலில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருந்தனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் சத்தம் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பெரோஜ்பூரில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எல்லைப்பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதன்படி வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.