
புதுடெல்லி,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக பா.ஜனதா மீது ராகுல் காந்தி தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வருகிறார். மேலும் தேர்தல் கமிஷனும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மராட்டிய தேர்தல் முறைகேடுகளை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி அது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் கட்டுரையும் எழுதியுள்ளார்.அதில் மராட்டிய தேர்தலில் நடந்த முறைகேடுகளை 5 வழிகளாக வகைப்படுத்தி பட்டியலிட்டு இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷன் நிராகரித்து உள்ளது. மராட்டிய தேர்தலில் பாதகமான தீர்ப்பு கிடைத்ததால் தேர்தல் கமிஷனை அவமதிப்பது அபத்தமானது என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியுள்ளன.
ராகுல் காந்தியின் கட்டுரையில் அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகையில், 'தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் தவறான தகவல்களைப் பரப்பினால், அது இந்த பிரமாண்டமான பணிக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது' என தெரிவித்தன. மராட்டியத்தின் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.